பதிவு செய்த நாள்
25
ஜன
2020
11:01
ஆத்தூர்: தளவாய்ப்பட்டி கிராமத்தில், தை அமாவாசை முன்னிட்டு சன்னாசி வரத பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில் உள்ள, மலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த, ஸ்ரீஞாலகிரி சன்னாசி வரதன், வேணுகோபால் சுவாமி கோவில்கள் உள்ளன. இங்கு, சித்தராக வாழ்ந்த சன்னாசி வரதன், தை அமாவாசை நாளில் தான், ஜீவசமாதி அடைந்தார். இதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஓலப்பாடி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சன்னாசி வரத பெருமாள், வேணுகோபால் சுவாமிக்கு கோவில் அமைத்து, தை அமாவாசையில் தேர்த்திருவிழாவை நடத்தி வருகின்றனர். தை அமாவாசை நாளான, நேற்று மாலை, 4:00 மணியளவில் சன்னாசி வரதன், வேணுகோபால் சுவாமியின் இரண்டு தேர்களை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி மற்றும் விழாக் குழுவினர், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இரண்டு தேர்களும் பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கரகோஷம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தன. அப்போது, சன்னாசி வரதன், வேணுகோபால், ராதா, ருக்குமணி, கிருஷ்ணன், சிங்க முக ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.