பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
செய்யாறு, வேதபுரீஸ்வரர் கோவிலில், ரதசப்தமி பிரம்மோற்சவ கொடியேற்றம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூரில், பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், ரதசப்தமி பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில், கோவில் நடை திறக்கப்பட்டு, வேதபுரீஸ்வரர், பாலகுஜாம்பிகை அம்மன் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கற்பக விருட்சம், காமதேனு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. இன்று காலை சூரிய பிரபை, இரவில் சந்திரபிரபை வாகனத்திலும், 28ல், பூதவாகனம், 29ல், பெரிய நாக வாகனம், 30ல், அதிகார நந்தி வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. அன்றிரவு பெரிய ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, 31ல், 63 நாயன்மார்கள் புறப்பாடு, பகலில் சந்திரசேகர சுவாமி வீதி உலா, இரவு தோட்ட உற்சவத்துடன் யானை வாகன சேவை, பிப்.,1ல், ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று மாலை, தேரோட்டம் நடக்கிறது.