பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
கிருஷ்ணகிரி: எலுமிச்சங்கிரி கிராமம், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, எலுமிச்சங்கிரி கிராமம், சென்றாய சுவாமி குன்றின் அடிவாரத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், ஏழாம் ஆண்டு மற்றும் மலேசியா முருகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சக்தி லலிதாம்பிகை கோவில், மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, சுத்தி புண்ணியாதானம், கணபதி ஹோமம், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு காயத்ரி ஹோமம், முதல் கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை, 3:00 மணிக்கு வேள்வி பூஜையும், 5:00 மணிக்கு அபிஷேகமும், வெண்ணை காப்பு அலங்காரமும் நடந்தன. காலை, 8:00 மணிக்கு ஊர்மக்கள் சீர்வரிசையை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தனர். தொடர்ந்து மஹா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தர்மகர்த்தா ராமன், முருகர் கோவில் தர்மகர்த்தா வெங்கட்டாசலம், ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.