பதிவு செய்த நாள்
28
ஜன
2020
03:01
திருவாரூர்: ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பணி பணிகளை ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆய்வு செய்தார்கள்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி (கும்பகோணம்) அருகில் குரு ஸ்தலத்தை அடுத்துள்ள ஞானபுரீயில் சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் உத்தரவின்பேரில் ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தால் இக்கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலில் 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளான மிருத சஞ்சீவினி, விசல்ய கரனீ, ஸாவர்ண கரனீ, ஸந்தான கரனீ ஆகிய மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. கோவிலில் 108 அடி உயர பஞ்சதள விமானம், ஆஞ்சநேயர் சன்னதி முன்பு பிரம்மாண்ட கர்ப்பகிரகம் அர்த்த மண்டபம், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் சன்னதிகள், மடப்பள்ளி ஆகியவற்றின் திருப்பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று கோவிலுக்கு எழுந்தருளிய ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவில் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் வரும் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி எட்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. அதனையடுத்து பிப்ரவரி 7ம் தேதி வெள்ளிக்கிழமை மீன லக்னத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு மகா சுவாமிகள் திருக்கரங்களால் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.