பதிவு செய்த நாள்
29
ஜன
2020
10:01
மதுரை : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஆகம விதிகள்படி தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் மன்னர் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் 1003 மற்றும் 1010 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. நமது பழங்கால கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. தற்போது கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது நடைமுறையில் உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு பிப்.,5 ல் நடைபெற உள்ளது. இதை தமிழ் முறைப்படி நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு திருமுருகன் மனு செய்தார். இதுபோல் தஞ்சாவூர் செந்தில்நாதன், மணியரசன் மனு செய்தனர். மதுரை வழக்கறிஞர் சரவணன் தரப்பில்,தஞ்சாவூர் பெரிய கோயில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. அதன் அனுதியின்றி, கோயிலில் முடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும், என மனு செய்தார். அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் பொதுச் செயலாளர் முத்துக்குமார்,பாரம்பரிய ஆகம மரபுப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்.
திருமுருகன் வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக இணைத்து, எங்கள் கருத்தையும் கேட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என மனு செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.தமிழக அறநிலையத்துறை செயலாளர் பதில் மனு:தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1980 மற்றும் 1997 ல் பாரம்பரிய நடைமுறைப்படி குடமுழுக்கு நடந்தது. மதம் மற்றும் பாரம்பரிய நடைமுறையை பின்பற்றி பிப்.,5 ல் குடமுழுக்கு நடத்தப்படும்.
பிப்.,1ல் துவங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.,5ல் நடக்கும் குடமுழுக்கு வரை தமிழில் திருமுறை பாராயணம், பன்னிரு திருமுறை, அபிராமி அந்தாதி, திருப்புகழ் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாக கூறுவது சரியல்ல. குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும். ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழ் திமுருறைகள் பாட ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 2 ஓதுவார்கள் இக்கோயிலில் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடமுழுக்கின்போது திருமுறைகள் பாட கூடுதலாக 80 ஓதுவார்கள் ஈடுபடுத்தப்படுவர். தமிழுக்கு மேலாக சமஸ்கிருதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
தமிழ், சமஸ்கிருதத்திற்கு சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குடமுழுக்கு அழைப்பிதழில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார். அரசுத்தரப்பில்,குடமுழுக்கு நடத்த தற்காலிக பந்தல் குறிப்பிட்ட பரப்பளவில் அமைக்க வேண்டும். விழா முடிந்ததும் அவற்றை அகற்ற வேண்டும். தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்க வேண்டும். போதிய போலீஸ் பாதுகாப்பு செய்ய வேண்டும்.
பார்வையாளர், பக்தர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பன உட்பட 15 நிபந்தனைகளுடன் மத்திய தொல்லியல்துறை அனுமதித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள்,மத்திய தொல்லியல்துறையின் அனுமதியின்றி முடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும், என்ற மனுவை பைசல் செய்தனர். மற்ற மனுக்கள் மீது அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று (ஜன.,29) ஒத்திவைத்தனர்.