திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் நிறைவாக சுவாமி சயனகோலத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஒரே கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தி உலா நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். தொடர்ந்து கண்ணாடி அறையில் திவ்யபிரபந்த துவக்கம். சேவை சாற்றுமறை, பெருமாள் தாயார் கண்ணாடி அறையில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு தாயார் பெருமாள் ஒரே கேடயத்தில் புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.