நம் இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டு தோறும் சாதுர் மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு, வியாச பூஜை நடைபெறுவதை அனைவரும் அறிவோம். வியாச பூஜை என்பது சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி அன்று வருவது. இதையே குரு பவுர்ணமி என்றும் சொல்வர். எல்லோருக்கும் இந்த பவுர்ணமி உயர்ந்ததே. எனினும் சன்னியாசிகளுக்கு மிகவும் முக்கியமானது. வேத வியாசரை நாம் ஏன் கொண்டாடுகிறோம்? இந்து மதம் மிகமிகப் பழமையானது. நம் மதத்திற்கு மூலம் வேதம். வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நம் மதத்திற்கு வைதிகமதம் என்று பெயர். வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை. வியாசர் இவ்வேதங்களை துவாபரயுக முடிவில் நான்காகப் பிரித்துக் கேட்டு, ஸ்வரத்தோடு அத்தியாயனம் செய்தார். இவை உலகில் தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டுமென்று ஜைமினி, வைசம்பாயனர், ஸுமந்து, பைலர் ஆகிய நான்கு முனிவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் வேதத்தின் தாத்பர்யத்தைப் பதினெண் புராணங்களாக்கி சூத முனிவருக்கு உபதேசித்து அனைவ ரும் பயன் அடையச் செய்தார். தவிர வேதத்தின் தத்துவங்களை உள்ளடக்கி சுருக்கமாக பிரம்ம சூத்திரம் எழுதினார். ஆதிசங்கரர் முதற்கொண்டு பலரும் இதற்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளனர்.
மகரிஷிகளில் வியாசருக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது. வேத ங்கள், இதிகாசங்கள். புராணங்கள் எல்லாவற்றையும் காப்பாற்றி, அடுத்து வரும் தலைமுறைகளுக்குக் கொடுத்தவர் வியாசர். அதனால்தான் அவரை "வேத வியாசர் என்றும் "வியாச பகவான் என்றும் உலகம் போற்றுகிறது. நமது சகல தர்மங்களுக்கும் அவரே பிதாமகர். அதுமட்டுமல்ல, வியாச பகவானுக்கு மிகவும் பரந்த மனம். அவருடைய இதயம் விசாலமானது. அன்பு நிறைந்தது. அதனால்தான் "வியாசே விசால புத்தே என்று அவரை வர்ணிப்பார்கள். மகாபாரதத்தையும், ஸ்ரீமத் பாகவதத்தையும் பதினெட்டுப் புராணங்களையும் வேத வியாசர் எழுதியது மனித குலத்திற்காகத்தான். ஒரு சமயம் வேத வியாசரிடம் சென்றார்கள் சில பக்தர்கள். ""சுவாமி! நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் எங்களால் படிக்க முடியவில்லை. எனவே இவற்றின் சாரத்தை எங்களுக்கு உபதேசிக்க வேண்டும்!” என்று கேட்டார்கள். வேத வியாசபகவான் சொன்னார், ""அன்பர்களே! நான் எழுதிய எல்லா நூல்களின் சாரம் இரண்டே வார்த்தைகளில் அடங்கிவிட்டன. அவை "பரபீடனம் பாபம்; பரோபகாரம் புண்யம் எனப்படும். அதாவது "பிறருக்குத் தீமை செய்வது பாவம். பிறருக்கு உதவி செய்வதே புண்ணியம். இதுதான் அத்தனை நூல்களின் சாரம்.” நம் மதத்திற்கு மூல புருஷராக விளங்கி நமக்கு நல்லனவெல்லாம் வழங்கிய வியõசபகவானை நாமும் மனதார நினைத்துப் போற்றுவோம். அந்த குரு அருளால் நமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்.