மத்தியப்பிரதேச மாநிலம் - சிந்தவாடா அருகில் சாம்வலி எனும் ஊரில், பள்ளிகொண்ட அனுமன் கோயில் உள்ளது. நாக்பூரிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம். உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை தொலைவிலிருந்தும் தெளிவாக தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் அருகில் கதாயுதத்தை வைத்துக்கொண்டு, அரைக்கண் மூடிய கோலத்தில், கால்மேல் கால் போட்டவாறு படுத்துறங்கும் நிலையில் அனுமன் அருள்புரிகிறார். ராமாவதாரம் முடிந்த பிறகு ஆஞ்சநேயர் இங்கு வந்து பெரிய மரத்தடியில் படுத்து, ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால், இருமுறை அனுமனை நிற்க வைத்து கோயிலெழுப்ப முயற்சிகள் நடந்தன. ஆனாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன என்கிறார்கள். மர வேரிலேயே சுயம்புவாக அருள்பாலிக்கும் இந்த அனுமன் திருமேனி முழுவதும் செந்தூரம் பூசப்பட்டு காட்சியளிக்கிறார் (சுமார் 6 அடி நீளம்). முதல் சுற்றில் (பிராகாரத்தில்) ஆண்கள் மட்டுமே செல்லலாம். பெண்கள் இரண்டாம் சுற்றுப்பாதையில்சென்று (அனுமனின் கால் புறமாகச் சென்று) தரிசிக்கலாம். கோயில் நுழைவாயிலிலிருந்து உள்பக்கம் வரை, அனுமன் சாலீசா இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது. மனநிலை சரியில்லாதவர்கள் இந்த மாருதியை தரிசித்து வழிபட்டால் குணம் பெறலாம் என்பது நம்பிக்கை.