பதிவு செய்த நாள்
14
பிப்
2020
11:02
சென்னை: வடபழநி முருகன் கோவிலில், உலக நன்மைக்காக, வாழும் கலை அமைப்பு சார்பில், 108 பேர் பங்கேற்கும் பிரமாண்ட கந்த சஷ்டி பாராயணம், நாளை மறுநாள் நடக்கிறது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருதேவின் தொண்டர்கள் வாயிலாக, ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காகவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தை கார்த்திகையை முன்னிட்டு, வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் துவக்கப்பட்டது.
பக்தர்களின் வரவேற்பை பெற்றதால், அதை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், மாலை, 6:00 மணி முதல், ஒரு மணி நேரம் பாராயணம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதன் துவக்க நிகழ்வாக, நாளை மறுநாள் மாலை, 6:30 மணிக்கு, 108 பேர் பங்கேற்கும் பிரமாண்ட கந்த சஷ்டி பாராயணம் நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை, வடபழநி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.