திருவெண்ணெய்நல்லுார் : பெரியசெவலை கல்பரதேசி சித்தர் கோவிலில் கந்தர் சஷ்டி கவசம் கூட்டுபாராயண விழா நேற்று நடந்தது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை மேட்டுச்சாவடி குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்து கல்பரதேசி சித்தர் கோவிலில் 120வது மாதம் கந்தர் சஷ்டி கவசம் பாராயண விழா நடந்தது.நவகிரகங்களினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், உடல் ஆரோக்கியமடையவும் ஒரே நாளில் தொடர்ந்து 36 முறை கூட்டு பாராயணம் நடந்தது.இதையொட்டி பழனி, திருச்செந்துார் உட்பட அறுபடை கோவில்களில் வைத்து பாராயணம் செய்த சரவணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இங்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பல திரவியங்களால் அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. புதுச்சேரி கந்தர் சஷ்டி கவச பாராயணக்குழு பொருளாளர், சீனுமோகன்தாஸ், சூரியநாராயணன் ஆகியோர் பாராயணத்தை துவங்கி வைத்தனர். பாராயணத்தை பாபு நடத்தினார்.விழாவில் பக்கதர்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.