பதிவு செய்த நாள்
18
பிப்
2020
11:02
மானாமதுரை: தமிழகத்தில் அம்மன் கோவில்களில் பொங்கல் விழாவின் போது தீச்சட்டி எடுத்தல் விழாவிற்காக தேவைப்படும் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி மானாமதுரையில் நடைபெற்று வருகிறது. மானாமதுரையில் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்பாண்ட பொருட்களை இங்குள்ள குலாலர் தெருவில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். மாசி,பங்குனி,சித்திரையில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் பொங்கல் பூஜை விழா நடைபெறும்.
ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி மற்றும் ஆயிரங்கண் பானை எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு செல்வர். மேலும் தாயமங்கலம் முத்துமாரியம்மன், காரைக்குடி கொப்புடை அம்மன், விருதுநகர், இருக்கன்குடி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் தீச்சட்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறுவது வழக்கம்.இந்த விழாக்களுக்காக தற்போது மானாமதுரையில் மண்ணால் ஆன தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,மேற்கண்ட ஊர்களில் நடைபெறும் விழாவிற்காக வியாபாரிகள் தீச்சட்டிகளுக்கு இங்கு வந்து ஆர்டர் கொடுத்துள்ளனர். மானாமதுரையில் தயாராகும் சட்டிகளில் தான் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி தரமாக இருப்பதினால் இங்கு ஆர்டர் கொடுக்கின்றனர், என்றார்.