மேலுார்: மேலுார் தாலுகா திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் எதிரிலுள்ள பிரம்ம தீர்த்தம் பயன்படுத்த முடியாதளவு பாசி படர்ந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயில் இது. 2,300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சிவன் சனிபகவானின் வாதத்தை தீர்த்த தலம் என்பதால் வாதவூர் என பெயர் பெற்றது. மகா சிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். சிவ, கபில, பிரம்ம, வாயு உள்ளிட்ட 7 தீர்த்தங்கள் உள்ளன. கோயில் வெளியேயுள்ள பிரம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட முடியவில்லை.
பக்தர்கள் கூறியதாவது: தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் அவதியுறுகின்றனர். பிரம்ம தீர்த்தம் முறையான பராமரிப்பின்றி பாசி படர்ந்துள்ளது. கோயில் நிர்வாகம் தீர்த்தத்தை பராமரித்து சுத்தப்படுத்த வேண்டும், என்றனர். தீர்த்தம் பராமரிக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.