வெண்குதிரை முகமும், மனித உடலுமாக விஷ்ணு எடுத்த அவதாரம் ஹயக்ரீவர். மது, கைடப அரக்கர்களை கொன்று வேதங்களை மீட்டவர் இவர். அதனால், ‘மறை மீட்ட பெருமான்’ என்று பெயர். கல்விக்கு உரியவராக விளங்குவதால் இவரை ‘வித்யாராஜா’ என்று போற்றுவர். மாணவர்கள் இவரை புதன்கிழமையன்று வழிபட்டால் கல்விவளர்ச்சி உண்டாகும். யோக நிலையில் இருக்கும்போது இவர் ‘யோகஹயக்ரீவர்’ என்றும், வலக்கரத்தால் அபயமுத்திரை காட்டியபடி இருந்தால் ‘அபயஹஸ்த ஹயக்ரீவர்’ என்றும் பெயர் பெறுவார். வரம் அளிக்கும் விதத்தில் வலதுகையை கீழ்நோக்கி காட்டி இருப்பவரை ‘வரதஹஸ்த ஹயக்ரீவர்’ என்பர். இவர் தாயாரை மடியில் ஏந்தியிருக்கும் போது ‘லட்சுமி ஹயக்ரீவர்’ எனப்படுவார். வாதிராஜ சுவாமிகள் என்ற பக்தர், நைவேத்யத்தை தலையில் வைத்து அமர்ந்திருக்கும் போது, பெருமாள் குதிரையாக வந்து தன் முன்னங்கால்களை தட்டில் வைத்து ஆர்வமாகச் சாப்பிட்டதாக தகவல் உண்டு.