ஒரு மைதானத்தில் இரண்டு குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை துõரத்தில் இருந்து பார்த்தால், ஒன்று போலத் தெரிந்தன. அருகில் வந்து பார்த்தால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது, ஒரு குதிரையின் அருகில் யாராவது சென்றால் அது ஏறிட்டுப் பார்க்கும். அதன் கழுத்து வாரில் ஒரு மணி கட்டப்பட்டிருந்தது. இன்னொரு குதிரை அருகே செல்பவரைக் கண்டு கொள்ளாது. ஏனெனில், அதற்கு பார்வை இல்லை. ஆனால், தன் அருகிலுள்ள குதிரையின் மணிச்சத்தத்தை உன்னிப்பாகக் கவனித்து அது செல்லுமிடத்திற்கு இதுவும் போய்விடும். பார்வையற்ற குதிரை என்றாலும், அதன் உரிமையாளர் அந்தக் குதிரையை அன்போடு பராமரித்து வந்தார்.ஒருநாள் மேய்ச்சல் முடிந்து, மணி கட்டிய குதிரை புறப்பட்டது. தன் நண்பனான குதிரை பின்னால் வருகிறதா என அது அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டது.
பார்வையற்ற குதிரையும் மணி சப்தத்தை உணர்ந்து பின்னாலேயே சென்றது. ‘தன் நண்பன் தன்னை தவறான வழியில் வழி நடத்தமாட்டான்’ என்பது அதன் தீர்க்கமான நம்பிக்கை. சில சமயங்களில் பார்வையற்ற குதிரை பின்தங்கி விட்டால், முன்னால் சென்ற குதிரை நின்று அதனை அழைத்துச் செல்லும். இதைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த குதிரைகளுக்குள் இவ்வளவு ஒற்றுமையா என்று!இந்த குதிரைகளின் எஜமானரைப் போலவே, அன்புள்ள நமது ஆண்டவரும் நாம் குறைவுள்ளவர்களாகவும், பிரச்னைக்குரியவர்களாகவும், பயனற்றவர்களாகவும், பாரமுள்ளவர்களாவும் இருந்த போதும், நிராகரிக்காமல் இருக்கிறார். நம்மைப் பரிவுடன் கண்காணிக்கிறார். மணி கட்டிய குதிரை வழிகாட்டியது போல, நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப மனிதர்கள் மூலம் தயவு கிடைக்கச் செய்கிறார். சில வேளைகளில் பார்வையற்ற குதிரை மெல்லிய மணியோசையைக் கூர்ந்து கவனித்து பின்செல்வது போன்ற நிலையை அவருடைய வார்த்தைகளைக் கொண்டு நம்மை வழிநடத்துகிறார்.ஒற்றுமையுள்ள இந்தக் குதிரைகளைப் போல, “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலா.6:2) என்ற வசனப்படி நடக்க அறிவுறுத்துகிறார்.