பதிவு செய்த நாள்
20
பிப்
2020
10:02
சிதம்பரம்: சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை பல்கலைகழக துணை வேந்தர் முருகேசன் துவக்கி வைத்தார். கடலுார் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 39 ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. தெற்கு வீதி வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில் நடந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர் முருசேகன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழக பண்பாடு, கலாசாரத்தை நிலை நிறுத்த வேண்டும். இந்திய நாட்டில் கலாசாரம், தமிழக பாரம்பரியம் இது போன்ற விஷயங்கள் நிலை நிறுத்தி வருகிறது என பல முறை கூறியுள்ளேன். நாட்டிய விழா 100 ஆண்டுகள் நடைபெற வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர் என்.எல்.சி., மனிதவள மேம்பாட்டு இயக்குநர் விக்ரமன் பேசுகையில், தமிழக பாரம்பரியம் பேணிக்காக்கும் விதமாக இந்த நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. சமூக வளைதளங்களில் அனைவரும் மூழ்கியிருக்கும் நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது சாதாரண விஷயமல்ல என்றார். ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த நாட்டிய நிகழ்வில் டில்லி காயத்ரி ஜெயராமன் பரதம், அமெரிக்கா, கலாதாரா ஆர்ட்ஸ் அகாடமி மாணவிகளின் பரதம், லண்டன் நிருத்ய சங்கீத அகாடமி மாணவிகளின் தசாவதார நாட்டிய நாடகம் கொல்கத்தா ஸ்ரீஜன் சந்தா குழுவினரின் ஒடிசி நடனம், விசாகப்பட்டினம் குச்சுப்புடி கலா கேந்திரம் சார்பில் குச்சுப்புடி நடனம், பெங்களூரு சாக்ஷியின் பரதம், பெங்களூரு அர்ச்சனா அருண் பரதம் ஆகியோரின் நாட்டிய அஞ்சலி நடந்தது. அறக்கட்டளை செயலாளர் சம்மந்தம், நிர்வாகிகள் ரத்தினராமநாதன், பழனி, துணை வேந்தரின் மனைவி நாகலட்சமி முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.