பதிவு செய்த நாள்
21
பிப்
2020
11:02
கோவை: ஈஷா யோகா மையத்தில் இன்று(பிப்.,21) மஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை முதல் நாளை காலை வரை, மஹா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர். பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பகல் 1:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை அவர் பார்வையிடுகிறார்.
மஹா சிவராத்திரி விழாவில், தியான லிங்கத்தில் நடத்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் துவங்கி, லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணைக்கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆதியோகி ஓராண்டாக அணிந்திருந்த ஒரு லட்சத்து 8 ருட்ராட்ச மணிகள், சர்ப்ப சூத்திரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
துணை ஜனாதிபதி, முக்கிய பிரமுகர்கள் கோவை வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.