வடமதுரை: அய்யலூரிலிருந்து ஒரே குழுவாக 6 ஆயிரம் பக்தர்கள் சமயபுரத்துக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். அய்யலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 31வது ஆண்டாக அய்யலூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரம் பேர் கடந்த மாதம் முதல் காப்பு கட்டி விரதம் இருக்கத் துவங்கினர். இவர்கள் நேற்று மாலை அய்யலூர் களர்பட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக ஆயிரம் பேர் என ஒரே குழுவாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் பிப். 23ல் சமயபுரத்தில் அம்மன் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.