பதிவு செய்த நாள்
22
பிப்
2020
10:02
தி.மலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.
பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதி பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும் காட்சி கொடுத்த நாள் மஹா சிவராத்திரியாகும். இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. கோவில் வளாகம் திராட்சை தோரணத்தாலும், இரண்டாம் பிரகாரம் வண்ண மின் விளக்குகளாலும் ஜொலித்தது. லிங்கோத்பவர் சன்னதி, வண்ணமலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இரவு, 7:30 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு அபிஷேகம் நடந்தது. கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தி லட்சார்ச்சனை டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், அர்ச்சனை செய்ய அரை கிலோ உதிரி பூக்கள் பக்தர்களிடம் வழங்கி, அதை சுவாமி கருவறையில் இருக்கும் சிவாச்சாரியார்களிடம் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ள அனுமதிப்பர். ஆனால், கோவில் நிர்வாகம் குறைந்த அளவு பூக்களை கொள்முதல் செய்ததால், காலை, 9:00 மணிக்கு மேல் லட்சார்ச்சனை டிக்கெட் கொண்டு வந்த பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யாமல், சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.