பதிவு செய்த நாள்
27
பிப்
2020
10:02
திருப்பதி :காளஹஸ்தி கோவிலில் நடந்து வந்த மஹா சிவராத்திரி பிரம்மோற்சவம், நேற்று திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது.ஆந்திரா மாநிலம், காளஹஸ்தி பட்டணத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நிறைவு நாளான நேற்று, தேவராத்திரியாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை காளஹஸ்தீஸ்வரன், ஞானபிரசுனாம்பிகை இணைந்து ஒரு பல்லக்கிலும், ஞானபிரசுனாம்பிகை தனியாக ஒரு பல்லக்கிலும், மாடவீதியில் வலம் வந்தனர்.
மாடவீதி வலம் முடிந்த பின், திரிசூலம் மற்றும் உற்சவமூர்த்திகள், கோவிலுக்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.அதன்பின், மண்டபம் அருகில் உள்ள கிணற்று நீரை எடுத்து, திரிசூலத்திற்கு ஸ்நானம் நடத்தப்பட்டது. பின், கலசங்களும், உற்சவமூர்த்திகளும் அலங்காரத்துடன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக, நேற்று மாலை, கொடிமரத்தில் கொடி இறக்கப்பட்டது. நிறைவு நாள் வாகன சேவையாக, உற்சவ மூர்த்திகள், சிம்மாசன வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன், காமதேனு வாகனத்திலும் மாடவீதியில் வலம் வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசித்தனர்.