பதிவு செய்த நாள்
27
பிப்
2020
11:02
உலகம் இணக்கமாக செயல்பட நட்பு, நம்பிக்கை, நாகரிகம் அவசியம்:
சென்னை : உலகம் இணக்கமாக செயல்பட, நட்பு, நம்பிக்கை, நாகரிகம் உள்ளிட்ட மூன்றும் அவசியம் என, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பேசினார்.
மந்தவெளி, கல்யாண நகர் அசோசியேஷன் சார்பில், திருவாவடுதுறை ஆதீனத்தின், சைவ சித்தாந்த, நேர்முக பயிற்சி மையத்தின், மந்தவெளி கிளை சைவ சித்தாந்த வகுப்பு மாணவர்களுக்கு, அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர், அருளாசி வழங்கி பேசியதாவது:ஹிந்து சமயத்தில், சைவ துறை என்பது, ஆற்றில் பல படித்துறைகள் இருப்பது போல, பல துறைகள் இருந்தாலும், எல்லாவற்றின் நோக்கமும் வேதத்தை அடிப்படையாக கொண்டு, இறைவனை வழிபடுவது தான்.ஆசார நுால்களின் அடிப்படையில், தெளிந்த பக்தியானது, உலக வாழ்க்கையில் அமைதியை தருகிறது. பக்தி நிறைந்த மனிதர்களால், பரஸ்பர நட்பு, நம்பிக்கை, நாகரிகம் இந்த மூன்றும் கடைப்பிடிக்கப்பட்டு, மற்றவர்களுடன் இணக்கமாக செயல்பட முடிகிறது.
சைவ அணுகுமுறை தேவையான ஒன்று, அதை விரிவாக தெரிந்து கொள்வதன் மூலம், உலக சமுதாயத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஏற்படும்.அதற்காக, சமஸ்கிருதத்தில் இருப்பதை தமிழிலும், தமிழில் இருப்பதை, சமஸ்கிருதத்திற்கும், மொழி பெயர்க்க வேண்டியது, இன்றைய அவசியமாகும்.பள்ளி மாணவர்களிடம், தேவாரம், திருவாசகத்தை ஓர் இயக்கமாக கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.