பதிவு செய்த நாள்
27
பிப்
2020
11:02
பரமக்குடி : பரமக்குடி அருகே மேலாய்க்குடி திருச்சண்முகநாதபுரத்தில் பதினெட்டாம்படி கருப்பணசாமி, அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பிப்., 24 ல் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் விழா துவங்கியது. மாலை 6:00 மணி துவங்கி, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் நடந்தது. பின்னர் முதல் கால யாக பூஜைகளும், மறுநாள் காலை 2 ம் கால யாக பூஜையும், மாலை 5:00 மணி துவங்கி, திருமுறை பாராயணம், 3ம் கால யாக பூஜை நிறைவு பெற்றது.
நேற்று காலை 6:00 மணி முதல் கோ பூஜை, லட்சுமி பூஜை நிறைவடைந்து, 4 ம் கால யாக பூஜைக்கான மகா பூர்ணாஹூதி நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தது.காலை 9:39 மணிக்கு மேல் ராஜ கோபுரம் உட்பட அனைத்து கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நிறைவடைந்து, சிறப்பு அலங்காரம், தீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன், சிங்கப்பூர் தொழில் அதிபர் மதனகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோயில் தலைவர் பாலபூமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் தனசேகரன், கண்ணன், நித்தியானந்தம், ராமநாதன், முத்துக்குமார், கோவிந்தராஜன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.