பதிவு செய்த நாள்
27
பிப்
2020
12:02
திருச்சி: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில், நந்தவனம் அமைக்க குழி தோண்டிய போது, தங்கப்புதையல் கிடைத்தது. திருச்சி, திருவானைக்காவலில், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி முன் உள்ள வாழைத் தோட்டத்தை, நந்தவனமாக மாற்றுவதற்கான பணி நடந்து வருகிறது.
கட்டுமான பணிகளுக்கு, குழி தோண்டிய போது, 1 அடி ஆழத்தில், பித்தளை கூஜா ஒன்று கிடைத்துள்ளது. பணியாளர்கள், கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். கோவில் நிர்வாக அதிகாரிகள், பித்தளை கூஜாவை திறந்து பார்த்த போது, அதனுள் நுாற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. வருவாய்த் துறை அதிகாரிகள், தங்க நாணயங்களை சரி பார்த்தபோது, அதில், 1,716 கிராம் எடையில், 505 நாணயங்கள் இருந்தன. கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர், தங்க நாணயங்கள் மற்றும் கூஜாவை, அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.