பதிவு செய்த நாள்
28
பிப்
2020
01:02
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், மாசித் தெப்பத் திருவிழா, நேற்று துவங்கியது. மார்ச் 5ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. மார்ச், 6ம் தேதி வரை நடைபெறும் விழாவில் முதல் நாளான நேற்று, தோளுக்கினியான் பல்லக்கில் நம்பெருமாள் புறப்பாடாகி, ரெங்கவிலாஸ் மண்டபம் வந்தடைந்தார். மாலை, 6:30 மணிக்கு, ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வந்தார். இன்று, ஹனுமந்த வாகனத்திலும், நாளை, கற்பக விருட்ச வாகனத்திலும், மார்ச், 1ம் தேதி, வெள்ளி கருட வாகனத்திலும், 2ம் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 3ம் தேதி யானை வாகனத்திலும் உள் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். மார்ச், 4ம் தேதி நெல்லளவு கண்டருளும் நம்பெருமாள், 5ம் தேதி உபய நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். தெப்பத் திருவிழா நிறைவு நாளான, 6ம் தேதி, வழிநடை உபயங்கள் கண்டருளும் நம்பெருமாள், தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருள்கிறார். அன்று இரவு, 7:30 மணிக்கு பந்தக் காட்சியுடன் தெப்பத் திருவிழா நிறைவடைகிறது.