பதிவு செய்த நாள்
29
பிப்
2020
11:02
தஞ்சாவூர் :கும்பகோணத்தில், மார்ச், 8ம் தேதி நடைபெறும் மாசிமக விழாவிற்காக, ஆறு சிவாலயங்களில் நேற்று கொடியேற்றம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மாசிமக திருவிழா, 8ம் தேதி நடக்கிறது.
இதற்காக, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய, ஆறு சிவன் கோவில்களில், நேற்று காலை, கொடியேற்றம் நடைபெற்றது.ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க, 10 நாள் உற்சவ விழாக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, மார்ச், 3ம் தேதி, ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 5ம் தேதி, திருக்கல்யாணம், 7ம் தேதி அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர், கும்பேஸ்வரர் கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக, 8ம் தேதி, மகாமகம் குளத்தில், முற்பகல், 10:00 மணிக்கு மேல், 11:45 மணிக்குள், மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது. 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.வைணவத் தலங்கள்மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், 10 நாள் உற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.