பதிவு செய்த நாள்
29
பிப்
2020
12:02
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கும்பாபிஷேக்தை விழாவினைத் தொடர்ந்து (29ம் தேதி) மண்டாலாபிஷேக விழா துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவின் போது 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்த நிலையிலும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு கிழமைகளில் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி - அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழா முடிந்ததும் பிப்.6ம் தேதி மண்டாலபிஷேக மண்டகபடி நிகழ்வுகள் தொடங்கியது. 48 நாட்கள் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சிகள் சித்திரை பெருவிழா தொடங்க உள்ளதால், 24 நாட்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இன்று 29-ம் தேதி மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. பின்னர் மகா பூர்ணாஹூதி நடைபெற்று பிரசாதம் வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து நாளை 1ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, தீபாரதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடும், பின்னர் காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாரதனை நடைபெறவுள்ளது. இதற்காக நடராஜர் சன்னதி அருகே யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சுவாமி, அம்பாளுக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.