பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன், சனி, கேதுவின் ஆதரவு உங்களுக்குத் தொடரும். செவ்வாய் மார்ச் 23 வரை சாதகமாக இருந்து நற்பலன் தருவார். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். குரு மார்ச் 27 வரை சாதகமான நிலையில் இருந்து நற்பலன் தருவார். அதன் பிறகு அவர் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு வருகிறார். இது சுமாரான இடம்தான்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரனால் மார்ச் 28க்கு பிறகு மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களுடன் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். புதனால் ஏற்பட்ட பிரச்னை, அக்கம் பக்கத்தினர் தொல்லை, பொருள் இழப்பு முதலியன ஏப்.1க்கு பிறகு மறையும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பொறுமை தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் உடனுக்குடன் முடிக்கவும். மார்ச் 28க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். சூரியனால் கண் தொடர்பான உபாதை வரலாம். மார்ச் 23 க்கு பிறகு செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் வளர்ச்சி பெறும். பங்கு வர்த்தகம் லாபத்தை தரும்.
* வியாபாரிகள் சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு காண்பர். மாத முற்பகுதியில் தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் உயரும்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராமல் வருமானம் கிடைக்கும். மறைமுகப் போட்டி குறையும்.
* அரசு பணியாளர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. கோரிக்கைகள் நிறைவேறும்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் குருவால் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை மார்ச் 27க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். பொருள் இழப்பு, இடமாற்ற பீதி மறையும்.
* ஐ.டி. துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்
* மருத்துவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தேவையனைத்தும் நிறைவேறும்.
* வக்கீல்களின் வளர்ச்சிக்கு பெண்கள் துணையாக இருப்பர். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை மார்ச் 27க்குள் கேட்டு பெறவும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சம்பள உயர்வுக்கு தடையிருக்காது.
* அரசியல்வாதிகள் பணப்புழக்கத்தில் இருப்பர். வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
* பொதுநல சேவகர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.
* கலைஞர்களுக்கு சக பெண் கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காண்பர். எள், கொள்ளு, துவரை, கொண்டைக் கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* வியாபாரிகளுக்கு ராகுவால் மனதில் இனம்புரியாத வேதனைக்கு ஆளாகலாம். வாடிக்கையாளரின் மத்தியில் குழப்பம் ஏற்படலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஏப்.1க்கு பிறகு பணிச்சுமைக்கு ஆளாவர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு வீண் மனக்கவலைக்கு ஆளாவர்.
* மாணவர்களுக்கு ஏப்.1க்கு பிறகு கூடுதல் கவனம் தேவை. சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.
நல்ல நாள்: மார்ச் 15,16,17,18,21,22,23,26,27,28 ஏப்.2,3,4,11,12,13
கவன நாள்: ஏப். 7,8 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: வெள்ளை, சிவப்பு.
வழிபாடு:
* தினமும் காலையில் சூரிய தரிசனம்
* செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு
* பவுர்ணமியின்று அம்மனுக்கு நெய்தீபம்