இரண்டாம் உலகப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் கழிந்தது. சமாதான நோக்கத்துடன் ஜெர்மன் நாட்டுத் துாதர்கள் இருவர் போலந்து நாட்டிற்கு வந்தனர். ‘‘ உங்களைச் சந்திப்பதற்காக மேற்கு ஜெர்மனி மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். போரின் போது ஜெர்மன் செய்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்கவும், புதிய உறவை உண்டாக்கவும் நாங்கள் உங்கள் முன் இப்போது காத்திருக்கிறோம்’’ என்றனர்.
போலந்து மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு நபர் கூட்டத்தில் எழுந்தார். ‘‘நீங்கள் செய்த கொடுமையை எங்களால் மறக்க முடியாது. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருபோதும் உங்களை நாங்கள் ஏற்க மாட்டோம்’’ என்று சொல்லி புறக்கணித்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் சமாதான பேச்சை ஜெபத்துடன் முடிக்க எழுந்தனர். ஜெபத்தின் போது, ‘‘எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்தது போல எங்கள் குற்றங்களையும் மன்னியும் ஆண்டவரே’’ என்று சொல்லும் நேரத்தில் கூட்டத்தில் கனத்த அமைதி நிலவியது. அதன் பின் சமாதானத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த நபர் மீண்டும் எழுந்தார். ‘‘உங்களை மன்னிப்பதற்கு மறுப்பு தெரிவித்தால் நாங்கள் ஆண்டவரை ஏற்காதவர்களாகி விடுவோம். மனித தன்மையில் இருக்கும் போது மன்னிக்க முடியாவிட்டாலும், ஆண்டவரின் அருளை எண்ணினால் மன்னிக்கும் எண்ணம் உருவாகும். அப்போது மன்னிப்பு என்பது சாத்தியமாகி விடும்’’ என்று சொல்லி முடித்தார். அதன்பின் ஒன்றரை ஆண்டுக்குப் பின் இரு நாட்டு மக்களும் வியன்னா மாநாட்டில் இணைந்தனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்புறவு இன்று வரை நீடிக்கிறது.