ஒருநாள் புத்தர் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது சீடன் ஒருவன், ‘‘குருநாதா! மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியைத் தேடியே அலைகின்றனர். ஆனால் யாரும் அதை அடைந்ததாக தெரியவில்லை. உண்மையில் மகிழ்ச்சி இருப்பது எங்கே’’ எனக் கேட்டான். “நான் ஒரு கதை சொல்கிறேன் கேள்’’ என்றார் புத்தர். சீடனும் தலையசைத்தான். “ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் தன் இருப்பிடத்தை அசுத்தமாக வைத்திருந்தான். அவனைக் கண்ட அனைவரும் முகம் சுளித்தனர். கையேந்தி நிற்கும் அவனுக்கு காசோ, உணவோ கிடைத்தால் மகிழ்வான். இல்லாவிட்டால் துக்கத்தில் வருந்துவான். ஒருநாள் அவனது வாழ்நாள் முடிவுக்கு வந்தது. இறந்து போன அவனை ஊரார் அப்புறப்படுத்தினர். அவனது இருப்பிடத்தை சுத்தப்படுத்த களத்தில் இறங்கினர். எவ்வளவு பெருக்கியும் அந்த இடத்தில் துர்நாற்றம் அடங்கவில்லை. கடைசியில் அவன் இருந்த இடத்தில் பள்ளம் தோண்டி, மண்ணை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, பள்ளத்தில் செம்புப்பானை ஒன்று கிடைத்தது. அதில் பொற்காசுகள் குவிந்திப்பதைக் கண்டு அதிசயித்தனர். தனக்கு கீழே புதையல் இருந்தும், அதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழாமல் பிச்சைக்காரனாகவே வாழ்ந்தானே! இதுவும் துரதிஷ்டம் தானே! என ஊரார் வருந்தினர்’’ என கதையை முடித்தார் புத்தர். ‘‘என் சந்தேகத்திற்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது குருநாதா?’’ எனக் கேட்டான் சீடன். ‘‘ஏதோ பிச்சைக்காரனின் கதையல்ல இது! மகிழ்ச்சியைத் தேடி அலையும் நம் ஒவ்வொருவரின் கதையும் இதுவே! மகிழ்ச்சியை வெளியுலகில் உள்ள பொருளிடமோ அல்லது வேறொரு மனிதனிடமோ தேடுகிறார்கள். ஆனால் எல்லையற்ற மகிழ்ச்சியளிக்கும் பொருள் நம் ஒருவருக்குள்ளேயும் இருக்கிறது. இதை உணராததால், ஏழையாக இருப்பவன் பணக்காரனாக மாறினாலும், பணக்காரன் பெரும் கோடீஸ்வரனாக மாறினாலும் மகிழ்ச்சியை அடையப் போவதில்லை. ஏனெனில் தேடுவது வெளியுலகத்தில். நமக்குள் இருக்கும் ‘மனம்’ என்னும் கருவியை அறிந்தால் அமைதி, நிம்மதி கிடைக்கும். அப்போது பெறும் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை’’ என்றார் புத்தர்.