பதிவு செய்த நாள்
26
மார்
2020
03:03
பல்லடம்: இல்லாதவர்களை தேடி சென்று உணவு வழங்குங்கள் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் அறிவுறுத்தினார். பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், அமாவாசை வழிபாடு நடந்தது. அதை முன்னிட்டு, மகா ம்ருத்தியுஞ்ஜய வேள்வியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு வேள்வியை நடத்தி வைத்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது: உணவே மருந்தாக கொண்டு நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். மனிதர்களுக்கு சுற்றுப்புறத் தூய்மையை காட்டிலும் உள் தூய்மை மிக முக்கியமானது. அதற்காக, நம் முன்னோர்கள் வழிகாட்டிய தூதுவளை, ஆடாதோடை, ஆவாரை, வேப்பிலை, திப்பிலி, மிளகு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்களை கொண்டு, கஷாயம் தயாரித்து அருந்துவது நல்லது. அதனால், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.
மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக, நாமும் பாடுபடவேண்டும். ஜீவாதாரமே பாதிக்கப்பட்ட பலர், உணவு உண்ணவும் வழியின்றி தவித்து வருகின்றனர். அது போன்றவர்களுக்கு, வசதி படைத்தவர்கள், உணவை தேடிச்சென்று வழங்க வேண்டும். ஒவ்வொரு நூற்றாண்டிலும், ஒவ்வொரு தீராத வியாதிகள் வந்து, மக்களை அச்சுறுத்தி வந்துள்ளன. அவ்வாறு, வாந்தி, பேதி வந்தபோது, கிராம மக்கள் மாகாளி தெய்வத்தையும், மாரி எனப்படும் அம்மை நோய் வரும்போது, மக்கள் மாரியம்மனையும், பிளேக் நோய் வரும்போது, பிளேக் மாரியம்மனையும் வழிபட்டனர். ஆனால், இன்று உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் நோய்க்காக, சக்தி வாய்ந்த கோவில்களும் மூடப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
இயற்கையின் சீற்றத்தின் போது, பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதுபோன்று, வைரஸ் நோய் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பும், தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சர்க்கரை, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதுபோன்று, உலக மக்களை அச்சுறுத்தி வரும், கொரோனா நோய் தாக்குதலில் இருந்தும், மக்கள் விடுபடுவார்கள். அனைவரும், இயற்கை சார்ந்த உணவுகளை உண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நூற்றாண்டுகள் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, பல்வேறு மூலிகைகள் கொண்ட கஷாய பொடியை, பக்தர்ளுக்கு வழங்கினார். சிறப்பு அலங்காரத்துடன், தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.