பழநி முருகன் கோயில் கருவறையை குளிர்ச்சியாக்க நீராளி பத்தியில் தண்ணீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2020 01:03
பழநி :பழநி முருகன் கோயில் கருவறையை குளிர்ச்சியாக வைக்க நீராளி பத்தியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பழநி முருகனின் மூலவர் சிலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க 64 மிராசு பண்டாரங்கள் மூலம் திருமஞ்சன நீர் எடுத்து வந்து தினமும் சுவாமிக்கு ஆறு கால பூஜைக்கு அபிஷேகம் நடக்கும்.பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வே, பழநி மலை முருகனை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதுதான். சில ஆண்டுகளாக பக்தர்கள் கொண்டுவரும் தீர்த்தத்தால் உற்ஸவமூர்த்திக்கு அபிேஷகம் நடக்கும். இதன் மூலமும் சுவாமியின் கருவறை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோயிலில் பூஜைகள் மட்டும் நடக்கிறது. இதனால் தீர்த்த அபிஷேகம் போதிய அளவு நடைபெறாமல் உள்ளது.இதை நிவர்த்தி செய்ய கோயில் நிர்வாகம் தினமும் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமியை குளிர்ச்சியாக வைக்கவேண்டும். அதே போல் கருவறையைச் சுற்றி நீராளிபத்தியில் தொடர்ச்சியாக நீர் நிரப்ப வேண்டும். இதனால் சுவாமியின் கருவறை குளிர்ச்சியாக இருக்கும். என, ஞானதண்டாயுதபாணி சுவாமி பக்தர் பேரவையின் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். பங்குனி திருவிழா ரத்து பழநி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.பழநி திருஆவினன்குடி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 31 கொடியேற்றத் துடன் துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் பங்குனி உத்திரத் திருவிழா மற்றும் அதுதொடர்பான நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாகவும், அதே நேரத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அனைத்து பூஜைகளும் தடையின்றி நடைபெறும். கோயிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதியில்லை, என பழநி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.