பதிவு செய்த நாள்
29
மார்
2020
03:03
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியில், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, வீட்டு வாசல்களில் மஞ்சள் நீர் விளக்கு வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும், பொதுமக்கள் செல்லும் இடங்களில் கிருமி நாசினிகள் தொடர்ந்து தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், சில மாவட்டங்களில் இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள், வேம்பு கலந்த நீரை, வீடுகளின் முன்பு தெளிப்பதும், வெளியே சென்று வருவோர் அந்த தண்ணீரில் கை கால்களை சுத்தம் செய்த பின்னர் உள்ளே நுழைவதுமாக பின்பற்றுகின்றனர். இதேபோல், உடுமலையிலும் பொதுமக்களின் நம்பிக்கை அடிப்படையில், சில செயல்பாட்டை துவங்கியுள்ளனர். ஜல்லிபட்டி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், இந்த வைரசால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த, ஒரு புதுமையான வழிபாட்டை துவங்கியுள்ளனர்.வீடுகளை சுற்றிலும் மஞ்சள் வேம்பு கலந்த நீரை தெளிக்கின்றனர். பின்னர், வாசலில், ஒரு செம்பில் மஞ்சள் நீர், வேப்பிலை வைத்து, அருகில் மண் விளக்கில் திரியிட்டு, எண்ணெய் ஊற்றி ஆனால் தீபம் ஏற்றாமல் வைத்து வழிபடுகின்றனர்.ஒரு சில வீடுகளில் துவங்கிய இந்த வழிபாடு தற்போது, பரவலாக மக்கள் பின்பற்ற துவங்கியுள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், முன்பு பிளேக் போன்ற நோய்கள் வந்தபோது, அந்தந்த வீடுகளில் உள்ளவர்களை பாதுகாத்துக்கொள்ள இவ்வாறு, மஞ்சள் நீர் வேப்பிலை வைத்து வழிபடுவது கிராமங்களில் வழக்கமாக இருந்தது. தற்போது, இந்த வைரஸ் நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த வழிபாட்டினால் குறையும் என்ற எங்களின் நம்பிக்கைக்காக பின்பற்றுகிறோம், என்றனர்.