பதிவு செய்த நாள்
29
மார்
2020
03:03
ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் வரை, கோவில்களில் அன்னதானம் தயாரித்து, உள்ளாட்சி நிர்வாக உதவியுடன் ஏழை, எளியவர்களுக்கு பொட்டலமாக வழங்க, அறநிலைய துறை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.தமிழகம் முழுதும், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, 754 கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வருகிறது. இதன் வாயிலாக, 25 ஆயிரம் பேர் வரை பயன் பெறுகின்றனர். அதாவது, கோவில் பக்தர்கள், 40 சதவீதமும், கோவிலை சுற்றியுள்ள ஏழைகள், 60 சதவீதமும் பயன் பெறுகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்னதானம் நிறுத்தப்பட்டது.ஊரடங்கு உத்தரவால், அன்னதானத்தை நம்பியுள்ள ஏழை எளியவர்கள், யாசகர்கள் ஒரு வேளை உணவும் கிடைக்காமல், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், கோவில்களில் அன்னதானத்தை சாம்பார் சாதம், தயிர் சாதம் என, கலவை சாதமாக தயாரித்து, மொத்தமாகவோ, பொட்டங்களாகவோ வழங்க, அறநிலைய துறை கமிஷனர், பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, கோவில்களில் தயாரிப்பட்ட உணவுகள், நேற்று முதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன், ஏழை எளியவர்களுக்கு, வினியோகம் செய்யப்படுகின்றன. - -நமது நிருபர் -