பதிவு செய்த நாள்
31
மார்
2020
03:03
சென்னை:கோவில் கைங்கர்ய பணிகளில் ஈடுபடுவோருக்கு, மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என, கிராம கோவில் பூஜாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான, எஸ்.வேதாந்தம் மற்றும் பேரவை அறங்காவலர், ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், தமிழகத்தில், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. அதில், 4,000த்துக்கும் அதிகமானவை, மிகப் பழமையான, புராதன கோவில்கள்.இந்த கோவில்களின், தெய்வீக கைங்கர்ய பணிகளில், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், கிராம கோவில் பூஜாரிகள், ஓதுவார்கள், வாத்திய கலைஞர்கள், கோவில்கள் அருகே பூக்கட்டி விற்போர், யானை பாகன்கள் உட்பட பல பணியாளர்கள், லட்சக்கணக்கில் உள்ளனர்.இவர்கள் அனைவரும், பக்தர்கள் தரும் காணிக்கைகள் மூலமே வாழ்க்கை நடத்தி வந்தனர். இப்போதுள்ள சூழ்நிலையில், கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், வாழ்வாதாரம் இன்றி, தெய்வீக கைங்கர்ய பணிகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தெய்வீக கைங்கர்ய பணிகளில் ஈடுபட்டுள்ளோர் குடும்பத்துக்கு, பேரிடர் கால உதவித் தொகையாக, மாதம், 5,000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். இதற்கு அறநிலைய துறை நிதியை பயன்படுத்த வேண்டும். நிலைமை சீராகும் வரை, இந்த உதவித்தொகை வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், ஊரடங்கு நேரத்திலும், கோவில்களின் பூஜை பணிகளுக்காக செல்லும் பூஜாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், வருத்தம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.