காசியில் இறப்பவர்களின் காதில் ‘ராம’ மந்திரத்தை சிவபெருமானே ஓதுகிறார். இதன் மூலம் அவர்கள் பிறப்பற்ற நிலையை அடையும் பேறு பெறுகின்றனர். இதனால் தான் ‘ ஒரு முறையாவது காசியை தரிசித்த பின் உயிர் போனாலும் கவலையில்லை’ என்பார்கள். அந்த ராம மந்திரம் சிவனுக்கு கிடைத்தது குறித்து செவிவழிக் கதை ஒன்றுண்டு. ஆதிகாலத்தில் ஒரு கோடி ஸ்லோகங்கள் இருந்தன. அவை இடம் பெற்றிருந்த சுவடிகளை பெறுவதில் தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள் இடையே போட்டி நிலவியது. முடிவு கிடைக்காததால் சிவனிடம் சுவடியை ஒப்படைக்கப்பட்டது. அவர் ஆளுக்கு 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ஸ்லோகம் வீதம் பிரித்தார். கடைசியில் ஒரு ஸ்லோகம் மிஞ்சியது. அதில் 332 எழுத்துக்கள் இருந்தன. இதையும் 110 எழுத்துக்களாக மூவருக்கும் கொடுத்தார். இறுதியாக இரண்டு எழுத்து மிஞ்சியது. ‘‘இதை பங்கிட முடியாது. அதை நானே எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் சிவன். அவர்களும் சம்மதித்தனர். ஆனால் அந்த எழுத்தை அறிய ஆவலாக இருந்தனர். ‘ராம ராம ராம’ என்று மும்முறை ஜபித்தார் சிவன்.