அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை, அங்கிருந்த அரக்கிகள் துன்புறுத்தினாலும், விபீஷணனின் மகளான திரிசடை மட்டும் ஆறுதலாக செயல்பட்டாள். ஒருநாள் சீதையின் காதருகில் வண்டு ரீங்காரமிடுவதைக் கண்ட அவள், “அம்மா! வண்டு உங்கள் காதருகே வந்து ஏதாவது நல்ல சேதி சொன்னதா! என்னைப் பொறுத்தவரை இது நல்ல சகுனமாக தோன்றுகிறது. உங்களுக்கு விடிவு காலம் நெருங்குவதை உணர்கிறேன்’’ என்றாள். இதைக் கேட்டு சோகம் மறந்த சீதை, “உன் பேச்சு தேன் போல காதில் பாய்கிறது. அமிர்தம் போல என் மனதுக்கு நலம் தருகிறது” என்றாள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் போதும். அவர்களின் மனதில் நம்பிக்கை துளிர் விடும்.