பதிவு செய்த நாள்
02
ஏப்
2020
10:04
மயிலாடுதுறை: திருவெண்காடு, சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் கொரோனா வைரஸ் அழிய வேண்டியும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் தேவாரப்பாடல் பெற்ற அருள்மிகு பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவபெருமானின் தெற்கு பாகத்தில் உள்ள அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி த்து வருகிறார். இக்கோயிலில் நவகிரகங்களில் புதன் பகவான் தனிசன்னதியில் எழுந்தருளியுள்ளார். இத்தகைய சிறப்புவாய்ந்த கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தலின் பேரில் கொரோனா வைரஸ் அழியவும், உலக நன்மை வேண்டியும் நேற்று காலை சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி சன்னதியில் விஷ்னு சஹஸ்ர நாமம், ருத்ர, பதிகங்கள் பாராயணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மிருத்யுஞ்சய மகா யாகம், தன்வந்திரி யாகம் மற்றும் ருத்ர யாகங்கள் நடத்தப்பட்டு பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனையும், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடத்தப்பட்டது. யாகத்தை பாபு குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதுபோல சுவாமிமலை சுவாமிநாத சுவா மி கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில், நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில், திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.