பதிவு செய்த நாள்
05
ஏப்
2020
02:04
பெ.நா.பாளையம்:இறைவனுக்கு தொண்டு செய்யும் பணியில் உள்ள கோவில் குருக்கள், பட்டாச்சாரியார், வைதீக உதவியாளர்களுக்கு, தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என, அகில பாரத பிராமணர் சங்கத்தினர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கத்தின் தேசிய தலைவர் குளத்து மணி ஐயர், தேசிய பொதுச்செயலாளர் ராமசுந்தரம், முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு: தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில், கொரோனா கிருமி தொற்று எதிர்ப்பு போராட்டத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இறைவனுக்கு தொண்டு செய்யக்கூடிய பணியில் உள்ள கோவில் குருக்கள், பட்டாச்சாரியார், வைதீக உதவியாளர்கள், ஊரடங்கு உத்தரவால், பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தினக்கூலி பணியாளர்கள் போல, அன்றாடம் கிடைக்கக்கூடிய சிறு காணிக்கைகள் வாயிலாகவே, தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.இவர்களுக்கு மரபுசாரா தொழிலாளர்களுக்கு வழங்குவது போல, ஊரடங்கு சிறப்பு ஊதியம் மற்றும் மளிகை பொருட்களை தமிழக அரசு வழங்கி, ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.