பழநிக்கு பொதினி என்று பெயருண்டு. ஞானப்பழம் கிடைக்காததால் கோபம் கொண்ட முருகன் இங்குள்ள குன்றின் மேல் ஏறி நின்றார். அந்த குன்று தான் பொதினி. இப்பகுதியை ஆவி என்னும் வேளிர் தலைவன் ஆட்சி செய்ததால் ஆவினன் குடி என்றும் பெயருண்டு. முருகன் சித்தர் (ஆண்டி) கோலத்தில் இருப்பதால் சித்தன் வாழ்வு என்றும் இத்தலத்தைக் குறிப்பிடுவர்.
சுவாமிக்கே நாதன்: மனிதனுக்கு ஆணவம் வந்தால் நல்வழிப்படுத்த கடவுள் இருக்கிறார். ஆனால் சுவாமிக்கு ஆணவம் வந்தால்... சுவாமிநாதனை சரணடைவது தான் வழி. மகாலட்சுமி செல்வத்தால் ஆணவம் கொண்டதால், அவளை மகாவிஷ்ணு புறக்கணித்தார். விஸ்வாமித்திரரின் படையை வென்றதால் காமதேனு ஆணவம் பிடித்து அலைந்தாள். தன்னால் மட்டுமே உயிர்கள் வாழ்கின்றன என்று சூரியன் ஆணவம் கொண்டார். சிவனைப் புறக்கணித்து நடந்த தட்ச யாகத்தில் பங்கற்று அக்னிதேவன் ஒளியிழந்தார். இவர்கள் அனைவரும், உத்திரநாளில் பழநி முருகனை வழிபாடு செய்து ஆணவம் நீங்கி நல்வாழ்வு பெற்றனர்.