தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். இத்தலத்தின் புராணப்பெயர் பரிதிநியமம். பரிதி என்றால் சூரியன். சூரியன் சிவபெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றதால், சுவாமிக்கு பரிதியப்பர் பாஸ்கரேஸ்வரர் என்னும் பெயர்கள் உள்ளன. பருதியப்பர் என்ற சொல்லே பருத்தியப்பர் என மருவி விட்டது. சிவனை சூரியன் வழிபடும் சிற்பத்தை கோயிலில் காணலாம். இங்குள்ள மங்கலநாயகியம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். இத்தல முருகனுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கும். கோயிலின் முன்புறத்தில் சூரியதீர்த்தமும், பின் புறத்தில் சந்திரதீர்த்தமும் உள்ளன. பரிதியப்பர், மங்கலநாயகி, முருகன், சூரியன் ஆகியோரை ஒருசேர வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் நீங்கும். சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இங்கு பங்குனி உத்திரவிழா சிறப்பாக நடக்கும்.