பதிவு செய்த நாள்
08
ஏப்
2020
10:04
மைசூரு: கொரோனா வைரஸ் உருவாகி பரவுவதற்கு முன்பே, உலகிற்கு ஆபத்து என, எச்சரிக்கை விடுத்த, இளம் ஜோதிடர், அபிக்ஞா ஆனந்த், வரும் டிசம்பர் மாதம் மற்றொரு பேரழிவு ஏற்படும் என, எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும், கொரோனா வைரசின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பேரழிவு குறித்து, இந்தியாவை சேர்ந்த இளம் ஜோதிடர், அபிக்ஞா ஆனந்த், கடந்த ஆகஸ்ட் மாதமே, சமூக வலைதளத்தில் ஒரு, வீடியோ வெளியிட்டார். நவ., 2019 முதல் ஏப்., 2020வரை உலகிற்கு மிகப்பெரும் ஆபத்து என, தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தி வரும், கொரோனா வைரசின் தாக்குதல், மே, 31ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என, கூறி இருந்தார். அடுத்தகட்டமாக, மே, 31ம் தேதியில் வைரஸ் பரவல் முடிவுக்கு வராது; இரண்டு நாட்கள் குறைந்து பின், ஜூன்,31ம் தேதி வரை பாதிப்பு தொடரும். அது வரையிலும் மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்காது என, கூறியிருந்தார். இந்நிலையில், அபிக்ஞா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், இந்த ஆண்டு, டிச., 20ம் தேதி, உலகிற்கு மற்றொரு பேரழிவு ஏற்படும் என, தெரிவித்து உள்ளார்.வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது: வரும், டிச., 20ம் தேதி, உலகை தாக்கும் புதிய பேரழிவு, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை நீடிக்கும்.
இது கொரோனா தொற்றை விட கொடியதாக இருக்கும். நம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டினால் மட்டுமே, புதிதாக உருவாகும் தொற்றுகளிலிருந்து, நம்மை பாதுகாக்க முடியும். அடுத்து, விலங்குகளை கொல்வதை நாம் நிறுத்த வேண்டும். இயற்கை அன்னைக்கு எதிரான நடவடிக்கைகளால், நம் கர்மவினை உயர்கிறது. இதை நிறுத்தாவிட்டால், பூமித்தாயின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இறைச்சிவிற்பனையாளர்கள், ஒரு தியாகமாக நினைத்து, தங்கள் தொழிலை நிறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.