பதிவு செய்த நாள்
08
ஏப்
2020
11:04
திருவண்ணாமலை :ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலையில், பவுர்ணமி தினமான நேற்று, பக்தர்கள் இல்லாமல், கிரிவலப்பாதை வெறிச்சோடியது.
திருவண்ணாமலையில் உள்ள மலையையே, பக்தர்கள் சிவனாக வழிபடுகின்றனர்.இதனால், மாதந்தோறும் பவுர்ணமியன்று பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர். தற்போது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமியான நேற்று, கிரிவலம் செல்ல, மாவட்ட கலெக்டர் கந்தசாமி தடை விதித்தார். இதனால், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் யாரும் வருகை தராத நிலையில், கிரிவலப்பாதையும், திருவண்ணாமலையும் மக்கள் இன்றி, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.