பதிவு செய்த நாள்
08
ஏப்
2020
11:04
பல்லடம்: கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து காக்க வேண்டும் என, பல்லடம் அருகே, மாரியம்மனை நினைத்து கும்மி ஆட்டம் ஆடி வழிபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன்மிகம் சார்ந்த பலரும், கொடிய நோயான கொரோனாவை விரட்ட, பல்வேறு வழிபாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் மங்கை வள்ளி கும்மி ஆட்ட கலை குழுவினர், பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் தனியார் தோட்டத்தில், நேற்று ஒன்று கூடினர். கோவில் விழாக்களில் கலை நிகழ்ச் சி நடத்தி வரும் அவர்கள், நேற்று நோயில் இருந்து காக்க வேண்டும் என, மாரியம்மனை நினைத்து வழிபட்டு கும்மி ஆட்டம் ஆடினர்.
அதில், கொடிய நோயும் இந்த கொரோனா கொழுந்து விட்டு எரியதுங்க, கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டமாக நாம் சேர வேணாம். வெளியே போகும் போது கண்டிப்பாக முக கவசம் போட வேணும், அரசு போடும் சட்டங்களை நாம் ஆதரிக்க நடக்க வேணும். குழந்தை குட்டி எல்லோருமே விட்டுக் கொண்டே இருக்க வேணும், இந்த கொடிய நோயிலிருந்து எங்களை காக்க வேணும் மாரியம்மா. உன்ன விட்டா எங்களுக்கு வேறு வழி இங்கே ஏதம்மா என்ற பாடல் வரிகளுடன், கும்மி ஆட்டம் ஆடி மாரியம்மனை வழிபட்டனர். அனைவரும், முக கவசம் அணிந்த படி, சமூக இடைவெளியை பின்பற்றியவாறு, கும்மி ஆட்டம் ஆடினர். அது குறித்து கலைக்குழுவினர் கூறுகையில், விழாக்களின் தான் நாங்கள் வழக்கமாக கும்மி ஆட்டம் ஆடுவோம். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், மாரியம்மனை வேண்டி இக்கும்மியாட்ட பாடலை அம்மனுக்கு சமர்ப்பித்தோம் என்றனர்.