பதிவு செய்த நாள்
08
ஏப்
2020
02:04
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் விதமாக இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது.
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடப்பது வழக்கம். இவ்விழாவையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணாநகர், சிவலிங்குளம், பாரதி நகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு படையலிட்டு சுவாமிக்கு தீபாராதனை செய்து வழிபாடுவர். பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டுதல்(பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கும். பாஞ்சாலி திருமணமும், விழாவின் 14ம் நாள் திருநங்கைகள்(அரவாணிகள்) பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுதும் ஆடிப்பாடி மகிழுவர். 15ம் நாள் தேரோட்டம் நடக்கும். இதில் பல கிராமங்கள், மாவட்டங்கள்,, மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பொதுமக்கள், திருநங்கைகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது உலகையே கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இதனால் இவ்விழா நடப்பதால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுமென அப்பகுதியை சேர்ந்த மக்கள் கருதினர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் விழா குழுவைச் சேர்ந்த கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வரும் 21ம் தேதி நடக்க இருந்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு நடக்கவிருந்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.