பதிவு செய்த நாள்
12
மே
2020
05:05
மாதத்தின் பிற்பகுதியில் முன்னேற்றம் பல காண்பீர்கள். தற்போது ரிஷபத்தில் இருக்கும் புதன் மே24 மிதுனத்திற்கு மாறி நற்பலன் தருவார். மிதுன ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அவரால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொன், பொருள் சேரும். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும்.
ராகுவால் அபார ஆற்றல் பிறக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குடியிருக்கும். மே24க்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
பெண்கள் குடும்பத்தினரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். மே24க்கு பிறகு அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணிபுரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். ஜுன் 4க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். விண்ணப்பித்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். கேது, சூரியனால் சிறு உபாதைகள் வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மே 24க்கு பிறகு கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அதிக லாபம் கிடைக்கப் பெறுவர். கடந்த காலத்தில் ஏற்பட்ட விரயம் மறையும்.
* வியாபாரிகள் ஜுன் 4க்கு பிறகு எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
* தனியார் துறை பணியாளர்கள் மே 24க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். வேலைப்பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர்.
* ஐ.டி., துறையினருக்கு ஜுன் 4க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
* மருத்துவர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். முக்கிய கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* வக்கீல்கள் மே24க்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு எதிர்பாராத முன்னேற்ற சம்பவங்கள் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை மே24க்கு பிறகு வைக்கலாம்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* கலைஞர்கள் ஜுன் 4க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சககலைஞர்கள் உதவிகரமாக இருப்பர்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், சோளம், மஞ்சள், காய்கறி மூலம் மகசூல் அதிகரிக்கும். மே24க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குருவின் பார்வையால் கல்வி வளர்ச்சி ஏற்படும். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். மே 24க்கு பிறகு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் மே24 வரை அலைச்சலுக்கு ஆளாகலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் அடிக்கடி செல்வர். பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
* வியாபாரிகளுக்கு மறைமுகப்போட்டி குறுக்கிடலாம். பணவிஷயத்தில் கவனம் தேவை.
* தரகு, கமிஷன் தொழிலில் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
* அரசு பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். மற்றவர் உதவியை நாடாமல் தன் கையே தனக்கு உதவி என உழைப்பது நன்மை தரும்.
* போலீஸ், ராணுவத்தினர் விழிப்புடன் செயல்படுவது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளிப் போடவும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் நெருக்கடி, மனக்குழப்பத்திற்கு அவ்வப்போது ஆளாகலாம்.
* விவசாயிகள் கோழி வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் பெற இயலாது.
நல்ல நாள்: மே 14,17,18,19,25,26,27,28, ஜுன் 2,3,4,5,6,9,10,14
கவன நாள்: மே 29,30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,5 நிறம்: பச்சை, வெள்ளை.
பரிகாரம்:
* வெள்ளியன்று மகாலட்சுமி வழிபாடு
* தினமும் நீராடியதும் சூரிய தரிசனம்
* சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை