ஒருநாள் இரவு கலீபா ஹஸரத் உமர் தம் தோழர்களுடன் நகர்வலம் புறப்பட்டார். வழியில் இருந்த குடிசை ஒன்றில் குழந்தைகளின் அழுகுரல் கேட்டது. கலீபா குடிசைக்குள் எட்டிப் பார்த்த போது, ஒரு பெண் அடுப்பில் பாத்திரத்தை வைத்தபடி நின்றிருந்தாள். அருகில் குழந்தைகள் பசியால் அழுதபடி இருந்தனர். அப்பெண்ணை விசாரித்த போது, அவள் விதவை என்றும் அழும் குழந்தைகளை சமாதானம் செய்ய தண்ணீரை அடுப்பில் வைத்து உணவு தயாராவதாக போக்கு காட்டுவதாகவும் தெரிய வந்தது. கலீபாவின் கண்கள் குளமானது. ‘‘எனது ஆட்சியில் இப்படி ஒரு அவலமா?’’ என வருந்தினார். உடனே களஞ்சியத்தில் இருந்து கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்களை தானே தோளில் சுமந்து வந்து கொடுத்தார். தோழர்கள் அந்த மூடையை தாங்கள் சுமந்து வருவதாக தெரிவித்தனர். ‘‘ மறுமையில் என் பாவச்சுமைகளை நீங்கள் சுமப்பீர்களா?’’ என மறுத்து விட்டார். மாதம் தோறும் அரண்மனைக் களஞ்சியத்தில் இருந்து அவளுக்குத் தேவையான பொருட்களை வழங்க உத்தரவிட்டார். இவரையே ‘மூட்டை சுமந்த முடிமன்னர்’ என இஸ்லாமிய வரலாறு குறிப்பிடுகிறது.