ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர், ‘‘முல்லா... உங்களின் கழுதையை இரவலாக கொடுங்கள். இரண்டு நாள் கழிந்ததும் தருகிறேன்’’என்றார். முன்பு ஒரு முறை அந்த நண்பர் இரவல் வாங்கிச் சென்ற போது, சொன்னபடி கழுதையை சரியான நாளில் கொடுக்கவில்லை. கழுதைக்கும் சரிவர உணவளிக்கவில்லை. தப்பு செய்த அவருக்கு தண்டனையாக ‘கழுதையை இரவல் தரக் கூடாது’ என முல்லா தீர்மானித்ததால், கழுதையை வேறொரு நண்பர் இரவல் வாங்கிச் சென்றதாக தெரிவித்தார். உண்மை என நம்பிய நண்பர் வெளியே வந்த போது, முல்லாவின் வீட்டுக் கொல்லையில் கழுதை கனைக்கும் சப்தம் கேட்டது. ‘‘கழுதை இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவல் பெற்றதாக பொய் சொல்கிறீரே’’ என வியப்புடன் கேட்டார் நண்பர். முல்லாவுக்குக் கோபம் வந்தது. ‘‘நான் சொன்னதை நீர் நம்பவில்லையா? ஒரு கழுதையின் சொல்லைத் தான் நம்புவீரா? என் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு இரவல் தரக் கூடாது என்பதற்காகவே கழுதையை வேறு ஒருவர் இரவல் வாங்கியதாகச் சொன்னேன்’’ என்றார். பதில் ஏதும் சொல்லாமல் நண்பர் இடத்தை விட்டு காலி செய்தார்.