மனைவியின் துர்போதனையால் பெற்றோரை புறக்கணித்தான் ஒருவன். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வீட்டுத் திண்ணையில் இருக்கச் செய்தான். தன் மகனிடம், ‘‘தாத்தா மிக மோசமானவர். அவர் அருகில் போகாதே. அவரால் எனக்கும், உன் அம்மாவுக்கும் எவ்வளவு சிரமம் தெரியுமா?’’ என்று சொல்லி எதிர்மறை எண்ணத்தை வளர்த்தான். பெற்றோருக்கு பழைய அனுமினியத் தட்டில் கஞ்சி ஊற்றி வந்தான். ஒரு நாள் அந்த தட்டைக் காணவில்லை. ‘‘ எங்கே தொலைந்தது தட்டு?’’ என ஆவேசமாகக் கத்தினான். வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்த சிறுவன், ‘‘அப்பா... அப்பா... நில்லுங்கள். தாத்தாவை கோபிக்காதீர்கள். நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே.... ‘என்னைப்போல நீயும் புத்திசாலியாக இருக்க வேண்டும்’ என்று! அதனால் தட்டை மறைத்து வைத்தேன். நான் பெரியவனாக வளர்ந்ததும் உங்களுக்கும் அந்த தட்டில் சாப்பாடு தர வேண்டும் என்பதற்காக பத்திரப்படுத்தினேன், ’’ என்றான். சிறுவனின் பேச்சு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. ‘நீ எந்த அளவினால் அளக்கிறாயோ அதே அளவினால் உனக்கும் அளக்கப்படும்’ என்னும் ஆண்டவரின் குரல் மனதிற்குள் ஓங்கி ஒலித்தது. மனம் திருந்திய அவன் பெற்றோரை நேசிக்கத் தொடங்கினான்.