சுயம்பு மூர்த்தி, பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என பல வடிவங்களில் சுவாமியை தரிசித்திருப்பீர்கள். ஆனால் சுவர் வடிவத்தில் சுவாமியை தரிசித்திருக்கிறீர்களா? நாகர்கோவில் அருகிலுள்ள புத்தேரி யோகீஸ்வரர் கோயிலில் மதில் சுவரை சுவாமியாக வழிபடுகின்றனர். முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில் காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் கோயில் கொண்டிருந்தார். இப்பகுதி மக்கள் ‘பூலா உடைய கண்டன் சாஸ்தா’ என்று பெயரிட்டு கோயில் எழுப்பி வழிபட்டனர். இத்தலத்திற்கு வந்த யோகி ஒருவர், சாஸ்தாவை வழிபட்டு இங்கேயே சமாதி அடைந்தார். சிலகாலம் கழிந்ததும், சமாதி மீது புற்று வளரத் தொடங்கியது. புற்றையே பக்தர்கள் வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில், சுவர் எழுப்பி வழிபட்டனர். சிவ அம்சமாக கருதி சுவாமிக்கு, ‘யோகீஸ்வரர்’ எனப் பெயர் சூட்டினர். திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் இங்கு சுவர் உள்ளது. அதன் உச்சியில் யோகியின் படுத்திருக்கும் வடிவம் உள்ளது. பூஜையின்போது சாதம் வைவேத்யமாக படைக்கப்படுகிறது. மூலவராக வணங்கும் சுவரின் மணலை பிரசாதமாகத் தருகின்றனர். புத்திர தோஷம் தீர இதை நெற்றியில் பக்தர்கள் பூசுகின்றனர். வைகாசி விசாகத்தன்று சாஸ்தா, யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது மாம்பழம், பலாப்பழம், அரிசிமாவு, சர்க்கரை கலந்த சாறு தயாரிக்கப்படும். ‘மாம்பால்’ எனப்படும் இக்கலவையை சுவாமிக்கு படைக்கின்றனர். பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று சாஸ்தா குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால் ‘புற்றேரி’ எனப்பட்ட இந்த ஊர் ‘புத்தேரி’ என மருவியது. செல்வது எப்படி நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ., விசேஷ நாட்கள்: வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் நேரம்: காலை 6:30 – 7:30 மணி, மாலை 6:30 – இரவு 8:30 மணி தொடர்புக்கு: 04652 – 275 230, 94871 01770 அருகிலுள்ள தலம்: நாகர்கோவில் நாகராஜா கோயில்