சூபிஞானி ஒருவரிடம் இளைஞன் புதிய மாணவனாகச் சேர்ந்தான். அவன் பெயர் மக்துாம். அறிவிலும், அடக்கத்திலும் சிறந்த அவனை மகான் நேசித்தார். அதைக் கண்ட மூத்த மாணவர்கள் பொறாமைப்பட்டனர். மக்துாமைப் பற்றி அடிக்கடி கோள் மூட்டினர். அதற்கு முடிவு கட்ட விரும்பினார் ஞானி. ஒருநாள், ‘‘அன்புச் செல்வங்களே! உங்கள் அறிவாற்றலுக்கு போட்டி வைக்கப் போகிறேன்’’என்றார். எல்லா மாணவர்களும் போட்டிக்குத் தயாராயினர். அவர்களின் முன்னால் ஒரே வடிவம், வண்ணம், அளவில் மூன்று பொம்மைகள் வைக்கப்பட்டன. ‘‘இதில் சிறந்தது எது என்று சொல்பவரே என் வாரிசு’’ என்றார் ஞானி. மாணவர்கள் ஒவ்வொருவராக ஆய்வு செய்தனர். சிறந்த பொம்மை எது என சொல்ல முடியாமல் மூத்த சீடர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். கடைசியாக மக்துாம் வந்தான். அவன் மெல்லிய நீண்ட கம்பி ஒன்றை கையில் எடுத்தான். முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். அதன் மறுகாது வழியாக கம்பி வந்தது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்த போது வாய் வழியே வெளியானது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது கம்பி தொண்டைக்குள் போனது. மூன்றாவது பொம்மையே சிறந்தது என தெரிவித்த மக்துாம் அதற்கான காரணத்தைக் கூறினான். “கேட்பதை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விடுவது முதல் ரகம். இரண்டாவது ரகம் கேட்டதை அப்படியே சொல்லுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ளாது. மூன்றாவது ரகம் கேட்டதை ஜீரணித்து தன் வாழ்வை சீர் செய்யும் தன்மை கொண்டது. எனவே மூன்றாவது பொம்மையே தரத்தில் சிறந்தது’’ என்றான். பொறாமைப்பட்ட மாணவர்கள் வாயடைத்து நின்றனர்.