இயேசுவும் அவரது சீடர்களான அப்போஸ்தலர்களும் பயணத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் சீடர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. அவர்களிடம் ‘ நீங்கள் எதைப் பற்றி சண்டையிடுகிறீர்கள்?’ எனக் கேட்டார் இயேசு. யாரும் வாய் திறக்கவில்லை. ஏனெனில் தங்களுக்குள் யார் மிகப் பெரியவன் என்பதைப் பற்றியே சண்டையிட்டனர். சிலர் மற்றவர்களை விட தாங்களே முக்கியமானவர்கள் என காட்டிக் கொள்ள விரும்பினர். அப்படி தான் மட்டும் பெரியவனாக இருக்க ஆசைப்படுவது நல்லதல்ல என இயேசு அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். சிறுவன் ஒருவனை அழைத்து, ‘நீங்கள் எல்லோரும் சிறுபிள்ளைகள் போல மாறினால் தவிர, ஆண்டவருடைய ராஜ்யத்திற்குள் நுழைய மாட்டீர்கள். இந்த சிறு பிள்ளையைப் போல் ஆகிறவனே ஆண்டவரின் ராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்’ என்றார். சிறுபிள்ளைகள் மீது தனக்கு அக்கறை அதிகம் என்பதை இயேசு சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒருநாள் இயேசுவைப் பார்க்க சிலர் தங்களின் பிள்ளைகளை அழைத்து வந்தனர். அப்போது அப்போஸ்தலர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் இயேசு, ‘பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள், அவர்களைத் தடுக்க வேண்டாம். கடவுளுடைய ராஜ்யம் அவர்களைப் போன்ற ஆட்களுக்குத் தான் சொந்தம்’ என்றார்.